தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி பகுயில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 08 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார் இன்று ஞாயிற்கிழமை கைது செய்தனர்.

அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார் வழங்கிய உத்தரவுக்கமைய, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ளியு.என்.எஸ்.பி. விஜயதுங்கவின் வழிகாட்டுதலின் பேரில், குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையினலான குழுவினர் மேற்படி சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பௌத்த பிக்கு ஆவார். மற்றொருவர் சட்டத்தரணி என அறிய முடிகிறது. சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது, அவர்கள் புதையல் தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையிலும், பூஜையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிருவாகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பல தொல்லியல் இடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.