தெற்காசிய விளையாட்டு விழாவில், கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற சேனைக்குடியிருப்பு வீரருக்கு கௌரவிப்பு
– எம்.என்.எம். அப்ராஸ் –
நேபாளத்தில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற சௌந்தராஜா பாலுராஜ், கராத்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றமையினை கௌரவிக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
கல்முனை வலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது .
இதன் போது சேனைக்குடியிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை , கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதான வீதி ஊடாக நிந்தவூர் வரை, வாகன பவனியாக அவர் அழைத்து வரப்பட்டார் .
வெற்றி வீரருக்கு வீதியில் பொது மக்கள் கூடிநின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து இவரை கெளரவிக்கும் நிகழ்வு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் தலைமையில் நிந்தவூர் அல் – மஸ்ஹர் பெண்கள் தேசிய பாடசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் கல்முனை வலய வலயக்கல்வி அதிகாரிகள், நலன் விரும்பிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வெற்றி வீரர் பாலுராஜ் – சேனைக்குடியிருப்பு கிராமத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார்.