மதுஷ் குழு தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்கும் பொருட்டு, பாதுகாப்பு தரப்பு துபாய் செல்கிறது
துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் தொடர்பில், துபாயில் நடத்தப்படும் விசாரணைக்கு உதவி செய்யும் பொருட்டு, இலங்கையிலிருந்து குழுவொன்று துபாய் செல்லவுள்ளது.
இதற்காக 06 பேர் கொண்ட குழுவொன்றினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ நியமித்துள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் பிரிவு, தீர்க்கப்படாத பிரச்சினைகளை விசாரணை செய்யும் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப் படை ஆகியவற்றிலிருந்து மேற்படி 06 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி குழுவினர் துபாய் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் அங்கு விரைவில் சென்று, மதுஷ் குழுவினர் தொடர்பான விசாரணைகளுக்கு உதவியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுஷ் நடத்திய களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 31 பேர், துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இலங்கையின் பிரபல சிங்களப் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவருடைய மகன் நதீமல் உள்ளிட்டோரும் அடங்குவர்.