மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரை; ஒரு கற்பனைக் கதை: இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவிப்பு

🕔 March 15, 2018

– அஷ்ரப் ஏ சமத் –

மாத்திரிகைகளை  உணவுடன் கலப்பதன் மூலம்  மலட்டுத் தன்மையை அல்லது கருவளத்தைத் தடுக்க முடியாது என்று இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மருத்துவா் சங்கத்தின் பொரளையிலுள்ள தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய,  அந்தச் சங்கத்தின் மருத்துவத்துறை பேராசிரியா்கள், வைத்திய கலாநிதிகள் உள்ளிட்ட மூத்த வைத்தியா்கள் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.

உணவில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்து கொடுக்கப்படுவதாக, சில விசமிகள் கட்டுக்கதைகளை  சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர் என்றும், இது கற்பனைக் கதையாகும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக, இலங்கை மருத்துவ சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கையில்;

“உணவுடன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரிகைளைக் கலப்பதன் மூலம், இன விருத்தியைத் தடுக்க முடியும் என்ற தவறான அச்சம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்துவது எமது கடமையாகும். விஞ்ஞான ரீதியில்  எதுவிதமான அடிப்படையும் இல்லாத – பொய்யான கூற்று இதுவாகும்  என்பதை, நாம்  பொறுப்புடன் கூறுகின்றோம்.

மருந்து மாத்திரிகைகள், துாள் அல்லது தடுப்புசிகள் மூலம் ஒரு மனித குழுமத்தையோ அல்லது இனத்தையோ மலட்டுத்தன்மையாக்க முடியும் என்பது, நடைமுறையில்  எவ்வகையிலும் செய்ய முடியாதது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்

ஓர் ஆணுக்குத் தற்காலிகமாக மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய, குடும்பக் கட்டுபாடுக்குரிய விழுங்கும் மாத்திரையொன்று உலகில் எங்கும் கிடையாது.

ஆண் – பெண் இரு பாலருக்கும்  ஒரு குழந்தையைக் கருத்தரிக்கச் செய்வதற்குத் தாக்கம் செலுத்தும் பல காரணிகள் உள்ளன. ஓர் ஆணின் கருவளத்துக்கு அவருடைய விந்துக்களின் கட்டமைப்பும் செயற்பாடும் எண்ணிக்கையில் சிறப்பான முறையில், விந்துத் திரவத்தில் இருப்பது அத்தியாவசியமாகும்.

இவற்றில் ஒரளவேனும் குறைபாடு ஏற்படும்போது,  ஓர் ஆண் மூலம் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் குறையும். இந் நிலைமை ‘கருவளக் குறைவு’ என அடையாளப்படுத்தப்படும்.

இது மிக அபூர்வமாக கருவளமின்மை அல்லது மலட்டுத் தன்மை வரை வளா்ச்சியடையக் கூடும். இத்தகைய விடயங்கள் ஒரு பெண்ணின்  கருவளம் மீதும் தாக்கம் செலுத்துகின்றது.

தற்போது பாவனையில் உள்ள சகல விதமான குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளும் தடுப்பூசிகளும் பெண்களின் பாவனைக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  இவற்றின்  மூலம் தற்காலிகமாக கருத்தரிக்கும்  ஆற்றல் தடுக்கப்படுகின்றது.

சில நோய்களுக்கு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் காரணமாக, கருவளம் பாதிக்ககூடிய சாத்தியம் உண்டு.  மருந்துகள் காரணமாக ஏற்படக் கூடிய  கருவளப் பாதிப்பு, மேற்படி மேற்படி மருந்தை நிறுத்தியவுடன் இயல்பு நிலைக்குத் திரும்பும். மேற்படி மருந்தைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட, மேல்நாட்டு மருத்துவரின் மருந்துச் சீட்டு சமா்ப்பிக்கபட வேண்டியது அத்தியவசியமாகும்.

மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகளை உணவுகளுடன் ஆண்களுக்கு கலந்து கொடுத்தால் அவருக்கு பிள்ளைப்பேறு கிடைக்காது என்பது ஒரு கட்டுக் கதையாகும். இந்தக் கூற்றுக்கு விஞ்ஞான ரீதியில் எவ்வித சான்றுகளுமில்லை” என்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்