சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் உதயங்க பெயர் இணைப்பு; கைது செய்யப்பட்டால், நாடு கடத்தப்படுவார்
சர்வதேச ரீதியாகத் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பெயர் நேற்று புதன்கிழமை இணைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதயங்கவின் புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்தும் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், அவரைப் பற்றிய தகவல்களில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் இனிமேல் அவரால் எந்தவொரு நாட்டுக்குள்ளும் நுழையவோ அல்லது தங்கியிருக்கும் நாட்டில் இருந்து வௌியேறவோ முடியாது. அவ்வாறு முயற்சிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாட்டின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கள்ளச்சந்தை ஆயுத வியாபாரிகள் போன்றோரே இந்தப் பெயர்ப்பட்டியலில் அதிகமாக இடம்பிடித்துள்ளார்கள்.
சர்வதேச குற்றவாளிகள் பெயர்ப்பட்டியலில் 300 பேரை இலங்கை சேர்த்துள்ளமை குறிப்படத்தக்கது.
அவர்களில் முக்கிய குற்றவாளியாக உதயங்க வீரதுங்க அறிவிக்கப்பட்டுள்ளார்.