தேர்தல் சட்டங்களை மீறி, சில கட்சிகளும் குழுக்களும் தனது படங்களைப் பயன்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் பொறுப்பில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக அநேகமான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தனது படத்தைப் பயன்படுத்துது குறித்து தான் அறிந்துள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தனது படங்களை யாரும் பயன்படுத்துவதற்கு – தான் எதிர்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதும், தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் தனது படங்களை யாரும் பயன்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தனது படங்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறும், தனது கடிததத்தில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



