நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம்
ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி ராஜினாமா என்பது, களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே, மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார்.
மேலும் இதுவிடயமாக அவர் குறிப்பிடுகையில்;
“ஊழல் விவகாரங்களில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அமைச்சர் ரவி கருநானயக்கார, தனதுபதவியை ராஜினாமா செய்திருந்தார். இது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு நல்லாட்சி நாடகமாகும் .
இந்த ராஜினாமாவானது தற்காலிகமானது என்பதை, அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் ராஜித உறுதி செய்திருந்தார். மேலும், அமைச்சர் நவின் திஸாநாயக்கவும் இதனை உறுதிசெய்துள்ளார். ராஜினாமாவின் கால எல்லை மூன்று மாதம் என்றும் பேசப்படுகிறது.
ரவி கருநாணாயக்கார தற்காலிகமாக ராஜினாமா செய்வதானால் அப்படியொரு ராஜினாமாசெய்திருக்க வேண்டிய அவசியமில்லை. மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமாக இருந்தால், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் பிரச்சினையில் இருந்து தப்பிக்க சில காலங்கள் ராஜினாமா செய்வது பெரிய விடயமுமல்ல. குறித்த மிகப் பெரும் ஊழல் தொடர்பான விசாரணைகளை, மூன்று மாத கால எல்லையினுள் முடித்துவிட மாட்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊழல் செய்தார் என, இவ் ஆட்சியாளர்கள் ஆட்சியமைத்த நாள்முதல் இன்று வரை விசாரணை செய்துகொண்டிருக்கின்றனர்.
விசாரணைகளை முடிவு செய்யாமல் மஹிந்த திருடியதாக கூறும் இவர்கள், ரவியின் விசாரணைகளையும் இழுத்தடிப்பு செய்து, அவர் நிரபராதி என காலம் கடத்துவார்கள்” என்றார்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)