பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி எல்லோரும் பொலிஸாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்
ஊடகவியலாளர்: பொலிஸாரைப் பற்றி அமைச்சரவையில் ஜனாதிபதி பேசும் போது, பொலிஸார் செயற் திறனற்றவர் என்று கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர்: ஜனாதிபதி எதையும் சொல்ல முடியும்.
ஊடகவியலாளர்: உங்களுடைய திணைக்களத்தைப் பற்றித்தான் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர்: ஓர் ஒழுக்கமுள்ள அதிகாரி எனும் வகையில், ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் என்னால் அபிப்பிராயம் கூற முடியாது.
ஊடகவியலாளர்: ஆனால், உங்களுடைய திணைக்களத்தைப் பற்றித்தானே ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர்: அப்படியொரு திணைக்களம் இப்போது இல்லை. ஸ்ரீலங்கா பொலிஸார் பற்றித்தான் ஜனாதிபதி பேசியுள்ளார். ஜனாதிபதி மட்டுமல்ல, மற்றவர்களும் பொலிஸாரைப் பற்றிப் பேசுகின்றனர்.
ஊடகவியலாளர்: எவ்வாறாயினும், நாட்டின் தலைவரொருவர் அவ்வாறானதொரு விமர்சனத்தை வெளியிடும் போது, பிரச்சினையொன்று உள்ளதே.
பொலிஸ் மா அதிபர்: பிரச்சினைகள் தொடர்பில் நாம் கருத்திற்கொள்ளும் போதுதான், பிரச்சினைகள் எழுகின்றன. எமது பொறுப்புக்களை நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நாம் செய்ய வேண்டியது அதுதான்.
ஊடகவியலாளர்: உங்களுடைய அபிப்பிராயப்படி, உங்கள் கடமைகளை நீங்கள் முழுமையாக நிறைவேற்றி விட்டீர்களா?
பொலிஸ் மா அதிபர்: நிச்சயமாக.
ஊடகவியலாளர்: அப்படியானால், ஊழல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வருடங்கள் கடந்த பிறகும் ஏன் தண்டிக்கப்படவில்லை.
பொலிஸ் மா அதிபர்: அவை தொடர்பான விசாரணைகளை வெளியிட முடியாது. அவை தொடர்பான விசாரணைகளை நடுநிலையுடன் மேற்கொள்கிறோம் என்பதை, பொலிஸ் மா அதிபர் எனும் வகையில் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.