தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை
கொழும்பிலுள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், கடத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் புகைப்படம் எடுக்கப்பட்டதாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலின்போது, அந்தக் பெண்ணின் நகைகள் உள்ளிட்டவையும் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மஹரகம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ். மீடின் தலையிலான குழுவினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் அலுவலகத்தில் வேலைகளை முடித்து விடட்டு, மஹரகம, அருச்சவல – ரத்மல்தெனிய பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு, தன்னுடன் பணியாற்றும் ஆண் நிகழ்ச்சித் தாயாரிப்பாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மேற்படி பெண் சென்றுள்ளார்.
இந்நிலையில் ரத்மல்தெனிய சந்திக்கு 500 மீட்டர் தொலைவில் வைத்து திடீரென வெள்ளை வேன் ஒன்றில் வந்தவர்கள், பெண் தொகுப்பாளரையும் ஆண் தயாரிப்பாளரையும் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர்.
இதன் பின்னர் சுமார் அரை மணி நேரத்தில் கடத்தப்பட்டவர்களுடன் ஓர் இடத்தை வேன் அடைந்துள்ளது. அங்கு வீடொன்றுக்குள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வேனில் நான்கு கடத்தல்காரர்கள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டின் அறையொன்றில் அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அங்கு பெண் தொகுப்பாளரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரர்கள் தமது கையடக்கத் தொலைபேசியொன்றில் புகைப்படம் எடுத்துள்ளனர். குறித்த ஆண் தயாரிப்பாளர் முன்னிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து தொகுப்பாளரின் தொலைபேசி, காதணி ஜோடி, தங்கச் சங்கிலி ஆகியவற்றுடன் பணப் பையும் பறித்தெடுக்கப்பட்டது.
பின்னர் அவ்விருவரையும் மீண்டும் வேனில் ஏற்றிய கடத்தல்காரர்கள், சனி அதிகாலை கொட்டாவ – மாலபல்ல ரயில் நிலையம் அருகே, கடத்தியவர்களை இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்டவர்கள் பயணம் செய்த தயாரிப்பாளரின் மோட்டார் சைக்கிளும் எங்கு உள்ளது என இதுவரை தெரியவில்லை. இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.