சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை

🕔 May 11, 2017

– எம். வை. அமீர், யூ.கே. காலிதின் –

சாய்ந்தமருத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாலயத்தை இடமாற்ற முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக, சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று, கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் அஹமட் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு எதிரான நிலைப்பாட்டை தெரியப்படுத்தும் ஊடக சந்திப்பு, இன்று வியாழக்கிழமை மிஸ்ரோ அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது இளைஞர் போரத்தின் பிரதித் தலைவருமான இஸ்மாயில் இக்தார் தலைமையில் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் அஹமட் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நல்லாட்சியானது நல்லவற்றினையே செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால்,  தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயங்களை பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசத்துக்கு இடமாற்றுகின்றார்கள். இந்த நடவடிக்கையானது நல்லாட்சிமீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் கண்டிக்கின்றோம்.

அரச கட்டிடம் இல்லை என்ற காரணத்தைக்கூறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்றினார்கள். ஆனால்,அரச கட்டிடத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக்காரியாலயத்தை அம்பாறையில் உள்ள வாடகைக்கட்டிடம் ஒன்றுக்கு இடமாற்றுவதற்கு முயச்சிக்கின்றார்கள். இது அநீதியானது, பாரபட்சமானது.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளோம். விசேடமாக பிரதேச அரசியல்வாதிகளுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். அவர்கள் இதுவிடயாமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, எமது பிரதேசத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நாடாளுமன்றில் இதுவிடயமாக உரையாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடராக இப்பிரதேசம் அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இப்பிரதேச இளைஞர்களின் சக்தியை புரிந்துகொள்வார்கள்.

காரியாலத்தினை இடமாற்றும் முயற்சிக்கு சில உத்தியோகத்தர்களும் உடந்தையாக இருக்கின்றனர். அவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவர்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு துணைபோகக்கூடாது.

இதற்கு எதிராக இளைஞர்கள் சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். அவர்களை நாங்கள் தடுத்து அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மட்டத்தில் குறித்த பிரச்சினையை தீர்த்துவைக்க முயற்சித்து வருகின்றோம்.  நிலைமை மோசமாகுமானால் இளைஞர்களின் செயற்பாடுகளை தாங்களால் தடுக்கமுடியாது போய்விடும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்