றிசாட்டின் அமைச்சின் கீழ் வரும் நிறுவனத்தின் பெயரில், ‘பெண்ட்ரைவ்’ வழங்கியவர்களுக்கு எதிராக முறைப்பாடு
‘சுரகிமு ஸ்ரீலங்கா’ என்ற, வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கெதிரான இனவாத அமைப்பு, ஜனவரி மாதம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் அனைவருக்கும் வழங்கிய ‘பெண்ட்ரைவ்’ இல், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தமை குறித்து கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் குறித்த முறைப்பாட்டினை செய்துள்ளதாக, கைத்தொழில் வர்த்தக அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையானது, அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனவாதச் சூழலியலாளர்களுக்கு தலைமை தாங்கி அவர்களைப் போஷித்து வரும் ஒடாரா குணவர்த்தன, ஆனந்த தேரர் மற்றும் சஜீவ சமிக்கர தலைமையிலான ‘சுரகிமு ஸ்ரீலங்கா’ எனும் அமைப்பு, வடக்கு முஸிம்களின் மீள்குடியேற்றத்திற்கெதிராக ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இந்த ‘பெண்ட்ரைவ்’ வழங்கப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளர்களின் இந்த முறை கேடான செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
சிங்களப் பத்திரிகை ஒன்றில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் குறித்த செய்தியின் பின்னரே, இந்த விடயம் அதிகார சபைக்கு தெரிய வந்ததாக வும், அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய இனவாதச் சூழலியலாளர்கள், வில்பத்து தொடர்பில் தொடர்ச்சியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சித்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
அன்றாடம் சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வில்பத்தை அழித்து இயற்கை வளத்தை அமைச்சர் ரிஷாட் நாசமாக்குகின்றார் என்று இந்த இனவாதிகள் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
முசலி மக்களின் மீள்குடியேற்றத்தை சட்டவிரோதமானதென நிரூபிப்பதற்காக, குறித்த இனவாதிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஏராளமானவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.