நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றிய தகவல் வெளியீடு; நுகேகொடயில் அதிக குற்றம்
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும், ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 7592 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மாத்திரம் பாரிய குற்றச்செயல்கள் 575 பதிவாகியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மனிதப் படுகொலை சம்பவங்கள் 39, பாலியல் குற்றங்கள் 198, வீடுகளை உடைத்தல் 153, கொள்ளைச் சம்பவங்கள் 64 மற்றும் திருட்டுச் சம்பவங்கள் 121 ஆகியவை பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் 90 குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான பாரிய குற்றச் செயல்களில் அதிகளவானவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அவற் றின் எண்ணிக்கை 170 ஆகும். மேல் மாகாணத்தில் நுகேகொட தொகுதியிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.