முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத்

🕔 November 28, 2016

rishad-puttalam-0112– சுஐப் எம் காசிம் –

மூதாயத்துக்கான பாதையிலிருந்து மு.காங்கிரஸ் தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டமையினாலேயே, பொய்யான காரணங்களைக் கூறி , அந்தக் கட்சியிலிருந்து மு.கா. தலைமை – தம்மை வெளியேற்றியதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

இதன் காரணமாகவே புதுக் கட்சியமைத்து மக்கள் பணியாற்ற நேரிட்டது எனவும் அவர் கூறினார்.

புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய காலத்தில், அந்த மாயையில் முஸ்லிம் இளைஞர்களும் வீழ்ந்து ஆயுதக் கலாசாரத்துக்குள் அள்ளுண்டு போகக் கூடாது என்ற உயரிய நோக்கிலேயே மர்ஹூம் அஷ்ரப் தனிக் கட்சி அமைத்து அரசியல் செய்தார். பல்வேறு கஷ்டங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து அந்தக் கட்சியை வளர்த்தெடுத்து, ஆட்சியிலே பங்காளியாகினார். ஜனாதிபதி சந்திரிக்காவை இரண்டு தடவைகளும், பிரேமதாசாவை ஒரு தடவையும், ஆக – மூன்று ஜனாதிபதிகளை ஆக்கிய பெருமை மர்ஹூம் அஷ்ரபை சாரும்.

ஆனால் அவர் மரணித்த பின்னர் அந்தக் கட்சி ஆட்சியைத் தீர்மானிப்பதில் மேற்கொண்ட முடிவுகள் வெற்றியளித்தனவா என்பதை நீங்களே அறிவீர்கள்.

எம்மைப் பொறுத்த வரையில் நாங்கள் புதுக் கட்சி அமைத்து மேற்கொண்ட அரசியல் பயணத்தில், நாம் எடுத்த முடிவுகள் பிழைபோகவில்லை. மஹிந்த ராஜபக்ஷவை இரண்டு தடவை ஜனாதிபதியாக்கவும், இம்முறை மைத்திரி பால சிறி சேனாவை ஜனாதிபதியாக்கவும் நாம் எடுத்துக் கொண்ட முடிவவானது, ஆட்சியமைப்பதில் முஸ்லிம் சமூகத்தை உரித்துடையவர்களாக்கியது.

அதே போல நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதில் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு முழுமையானது. எனினும் புதிய அரசாங்கத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறியிருக்கின்றதா? இல்லையா? ஏன்ற கேள்விக்கான விடைகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றோம். ஆட்சியாளர்கள், தமது அரியாசனத்தில் அமர்வதற்கு எங்கள் சமுதாயத்தை கடந்த காலங்களில் பயன்படுத்தியதே வரலாறாக இருக்கின்றது. சுதந்திரம் பெற்றதிலிருந்தே நாங்கள் கறிவேப்பிலையாக பயன்பட்டிருக்கின்றோம். நாம் ஆதரிக்கும் கட்சிகளை மதமாக நினைத்து பித்துப் பிடித்தவர்களைப் போல அலைந்து திரிந்திருக்கின்றோம். எல்லாக் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் சந்தரப்பத்துக்கு ஏற்றவாறு எம்மைப் பயன்படுத்தி இருக்கின்றன.

நமக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. அரசியல், வாழ்க்கை, தொழில், குடும்பங்களுடனான உறவு ஆகியவை தொடர்பில் நமது மார்க்கம் சரியான வழிமறைகளை கற்றுத்தந்திருக்கின்றது.

தூய்மையான நோக்கத்தோடுதான் கட்சியை ஆரம்பித்தோம். நல்ல சிந்தனைகளுடன் அதனை வளர்த்து வருகின்றோம். யாரையும் அல்லது எந்தக் கட்சியையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை. சமுதாயத்தை வாழ வைக்க வேண்டும். மற்றய சமூகத்துடன் சரிநிகராக சமத்துவதுடன் வாழ வேண்டும் என்ற தூய சிந்தனையில் எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதனால்தான் எம்மை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவுகளை எல்லாம் தகர்த்தெறிந்து தவிடு பொடியாக்கி பயணிக்கின்றோம்.

இந்தக் கட்சி என்ற வாகனத்தில் எவரும் ஏறிக் கொள்ளலாம். மக்களுக்கு சரியான பாதையைக் காட்டி, அவர்களின் நல்வாழ்வுக்கு நாங்கள் உதவுவோம்” என்றார்.rishad-puttalam-0113

Comments

புதிது பேஸ்புக் பக்கம்