அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை
🕔 November 19, 2016


– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும் சேவை, இன்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலத்தில் இடம்பெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதன் போது, பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவு, பயிற்சிப் பிரிவு, விசேட புலனாய்வுப் பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு மற்றும் மனித ஆட்கடத்தலுக்கு எதிரான பிரிவு ஆகியவற்றின் மூலம் சேவைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் சதுரி நாகந்தல, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் செயற்பாட்டு இயக்குநர் உபுல் தேச பிரிய, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ. அமீர், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் நிருவாக மற்றும் மனித வளப் பிரிவு முகாமையாளர் ஏ.எம்.எம். உமராத் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி பிரதீப் வீரதுங்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வெளிநாட்டு தொழில்களை எதிர்பார்ப்போருக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடான வழி காட்டல்களும் இங்கு வழங்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவையின் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். ஹனீபா ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இந்த நாடமாடும் சேவையின் போது, அம்பாறை மாவட்டத்தின் வெளிநாட்டு வேலை வாய்ப்;பு தனியார் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் செயற்பாட்டு இயக்குநர் உபுல் தேச பிரியவும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தனியார் முகவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டதோடு, சில வசதிகளை ஏற்படுத்தித் தடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுக்கொண்டனர்.

Comments

