மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை

🕔 October 29, 2016

karuna-011முன்னாள் பிரதியமைச்சர் கருண அம்மான் என அழைக்கப்படும் வி. முரளிதரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்றினை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பினை அடுத்து வாகனம் கைப்பற்றப்பட்டது.

குறித்த வாகனம் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஹொங்கொங் நாட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வாகனத்தின் பெறுமதி 07 கோடி 86 லட்சத்து 33 ஆயிரத்து 385 ரூபாய் என கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மோட்டார் வாகனம் தொடர்பில், சுங்க பிரிவில் அல்லது துறைமுகத்தில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சொகுசு வாகனம் – துறைமுகத்தின் ஊடாக மோசடியான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு வரிப் பணம் அல்லது அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் இந்த வாகனத்துக்காகச் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது மாத்திமின்றி, இந்த வாகனம் அரசாங்க மோட்டார் வாகன திணைக்களத்திலும் பதிவு செய்யப்படவில்லை. வாகனத்துக்காக எவ்வித காப்புறுதிகளும் பெற்றுக் கொள்ளப்படவுமில்லை.

இந்த வாகனத்தை நேற்றைய தினம் – மட்டக்களப்பிலுள்ள வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் வைத்து, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்