சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் போராடுவோம்: நிறுவன தலைவர் தெரிவிப்பு
சீ.எஸ்.என். நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக, அந் நிறுவனம் போராடும் என்று, சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.
தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினாலேயே தமது நிறுவனத்துக்காக ஒளிபரப்பு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்த வெலிவிட்ட, எவ்வாறாயினும், தமது நிறுவனத்தின் ஒளிரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லை என்றார்.
மேலும், ஊடகத்துறை அமைச்சானது – தமது நிறுவனத்தின் ஒளிபரப்பு அனுமதியினை ஒருதலைப்பட்சமாகவே ரத்துச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இருந்தபோதும், சீ.எஸ்.என். நிறுவனம் மீது எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை எனவும் ரொஹான் வெலிவிட்ட சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 2011 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, சீ.எஸ்.என். நிறுவனம் 330 மில்லியன் ரூபாவினை வருமான வரியாகச் செலுத்தியுள்ளதாகவும் வெலிவிட்ட சுட்டிக்காட்டினார்.