தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு
தன்னுடைய தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக, முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தொலைபேசி உரையாடல்களில் கூட – தான் ஒளிவு மறைவின்றிப் பேசுவதனால், அதனை ஒட்டுக் கேட்பது தொடர்பில் தனக்குப் பிரச்சினையில்லை என்றும் அவர் கூறினார்.
அவன் கார்ட் விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகி, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது நீதிமன்றுக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, வெளியேறிச் செல்லும் போது, ஊடகவியலாளர்களிடம் பேசினார்.
இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறுவது, நாட்டின் ஜனநாயகத்தினைக் கேள்விக்குட்படுத்தி விடும் எனவும் அவர் மேலும் கூறினார்.