அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம்
🕔 August 20, 2016



– றிசாத் ஏ காதர் –
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவையொன்று ஆரம்பமானது.
இரண்டு நாட்களைக் கொண்ட இந்த மருத்துவ சேவையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, இந்த சேவையினை இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைத்தனர்.
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூரில் அமைந்துள்ள தொற்றா நோய்களுக்கான ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான கே.எல்.எம். நக்பர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மருத்துவ சேவையானது, நாளையும் நடைபெறும்.
கண், காது, மூக்கு, சத்திரசிகிச்சை, அக்குபஞ்சர், பஞ்சகர்ம மற்றும் பொது வைத்தியத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள், இந்த சேவையில் கலந்து கொண்டு சிசிக்சையளித்து வருகின்றனர்.
அக்குபஞ்சர் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற, தென்கொரிய வைத்தியர் உட்பட, பல வைத்தியர்கள் இந்த மருத்துவ சேவையில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கான சிகிச்சையினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைத்திய சேவையில், இதுவரை பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாளையும், இதே இடத்தில் இந்த மருத்துவ சேவை நடைபெறவுள்ளது.


Comments



