முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர்.
அரசாங்க வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
த.தே.கூட்டமைப்பில் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய பியசேன, பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி, அந்த ஆட்சியில் இணைந்து கொண்டார்.
இறுதியாக இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்ணியியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட பியசேன தோல்வியடைந்தார்.
ஆயினும், பியசேன நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது, அவருக்கு அப்போதைய அரசினால் வழங்கப்பட்ட வாகனத்தினை, அவர் மீளவும் கையளிக்கவில்லை என்று தெரியவருகிறது.
இதனையடுத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.