மருதமுனையில் மூன்று முச்சக்கர வண்டிகள் தீக்கிரை
🕔 June 18, 2016
– ஏ.எல்.எம். ஸினாஸ் –
மருதமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் பள்ளிவாசல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் இன்று சனிக்கிழமை அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் மூன்று பேருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டிகளே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
வீட்டுத் திட்டத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்கு இடமில்லாமையால், இங்குள்ளவர்கள் அருகிலுள்ள பள்ளிவாயல் வளாகத்தில் முச்சக்கர வண்டிகளை இரவு வேளைகளில் நிறுத்துவது வழமையாகும்.
அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள், அதிகாலை 1.30 மணியளவில் தீயில் எரிந்துள்ளன.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக, இவ்வாறு முச்சக்கர வண்டிகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.