பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்தவுள்ளார்
பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளிப்படுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், தான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே பறக்கும் தட்டுக் குறித்த உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த 1950 ஆம் ஆண்டு முதலே பறக்குத் தட்டு குறித்த புகைப்படங்கள், அறிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உரு மாதிரி ஆராய்ச்சி குழுவின் (Paradigm Research Group) நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் பஸ்செட் கூறுகையில்;
“இது ஒரு முக்கிய அறிவிப்பு என நம்புகிறோம். இந்த வருடத்தில் பறக்கும் தட்டுகுறித்த உண்மை வெளியானால், உலக அளவில் அனைத்து பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியாகும். இந்த ஆண்டு நாம் மறைந்திருக்கும் உண்மையை தெரிந்து கொள்ளப்போகிறோம்.
நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்லப்போகிறார் என்பதை உறுதியாக சொல்லமுடியாது. ஆனால், உண்மையை வெளிப்படுத்திய ஜனாதிபதியாக ஒபாமா இருப்பார் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
நோபல் பரிசினை கருத்தில் கொண்டு ஒபாமா இதனை அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவதற்குள் இதனை ஒபாமா செய்துவிடுவார் என்பதை 85 சதவீதம் உறுதியாக சொல்லலாம். இதற்கு அடுத்த சில நாட்களில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இந்த விவாதத்தை கையில் எடுக்கலாம்” என்றார்.