நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கவர்ட் கோர்பரேட் சேர்விஸஸ் நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
பணச் சலவை சட்டத்தீன் மீதான விசாரணையின் நிமித்தம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே நீதவான் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.
‘ஊழலுக்கு எதிரான குரல்’ அமைப்பினால் நாமல் ராஜபக்ஷவுககு எதிராக கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட புகார் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து, நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் இன்று அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்தனர்.
நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கவர்ட் கோர்பரேட் சேர்விஸஸ் நிறுவனமானது, ஹெலோகோர்ப் நிறுவனத்திடமிருந்து 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்ததாகவும், குறித்த பணம் சட்டவிரோதமானது என்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, நாமலுக்குச் சொந்தமான மேற்படி நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறும், குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய 07 பேருக்கு பயணத் தடை விதிக்குமாறும், நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, குறித்த வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறும், சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கும் பயணத்தடை விதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.