கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை: நடந்தது என்ன?

🕔 January 17, 2023

– மப்றூக் –

ல்முனை மாநகர சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு, நாளை மறுதினம் 19ஆம் திகதி வரை – உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை கவனத்திற் கொண்ட நீதிமன்றம், இந்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

என்ன நடந்தது?

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இருந்து வந்த சாய்ந்தமருது பிரதேசத்துக்கென 2020ஆம் ஆண்டு நகர சபையொன்று பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன்படி குறித்த நகர சபைக்கான தேர்தலை நடத்தாமல் விடுவதென்பது தனது அடிப்படை உரிமையை மீறுவதாகத் தெரிவித்தும், சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தலை நடத்துமாறு உத்தரவிடக் கோரிக்கையும் ஏ.எல்.எம். சலீம் தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இவ்விடயத்தை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு மனுதாரர் ஏ.எல்.எம். சலீம் உறுதிப்படுத்தினார்.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம் என்பவரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.  

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகிக்கும் சலீம், இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார்.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சாய்ந்தமருதுக்கான நகர சபை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசமாக இருந்து வந்த சாய்ந்தமருதுக்கு – உள்ளுராட்சி சபையொன்று வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்தது வந்தது.

இந்த நிலையில் கடந்த 2020 பெப்ரவரி 14ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை பிரகடனப்படுத்தப்பட்டது.

2162/50 இலக்கத்தையுடைய அந்த வர்த்தமானி அறிவித்தலில், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை அமுலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என, 2020 பெப்ரவரி 20ஆம் திகதி, அப்போதைய அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்தார்.

இப்போதுள்ள பிரச்சினை என்ன?

ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றை ரத்துச் செய்வதாயின், அதனை இன்னொரு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது, அதன் பின்னர் இன்னொரு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ரத்துச் செய்யப்படவில்லை என்கிறார் மனுதாரர் சலீம்.

எனவே, தற்போது சாய்ந்தமருது நகரசபை அமுலில் உள்ளது என்றும், எனவே அதற்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்