அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்தில் தீ: 16 ஆயிரம் கோப்புகள் நாசம் எனத் தகவல்
– முன்ஸிப் –
அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடம் தீப் பற்றி எரிந்ததில், அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் எரிந்து – அழிவடைந்துள்ளன எனத் தெரியவருகிறது.
இன்று (21) அதிகாலை 3.50 மணியளவில் கட்டடம் தீப்பற்றியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை – முற்றாக எரிந்துள்ளதாகவும், அங்கிருந்த கோப்புகள் (Files) அனைத்தும் சாம்பலாகி விட்டதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவந்துள்ளது.
சுமார் 16 ஆயிரம் கோப்புகள் இதன் காரணமாக எரிந்து சாம்பலாகியுள்ள என, பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கூறுகின்றன.
தற்போது நீதிமன்ற விடுமுறைக்காலம் என்பதால், நீதிமன்றங்கள் சில நாட்களாக இயங்கவில்லை.
அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்துக்கு அருகில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும், முன்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.