டயானா கமகே பிரித்தானிய பிரஜை: குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு

🕔 December 6, 2022

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தை நாடாளுமன்றில் சமர்பித்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி; டயானா கமகே 2004 ஆம் ஆண்டு தொடக்கம், பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார் என்றும், அவர் 521398876 என்ற இலக்கைத்தைக் கொண்ட பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“இருப்பினும், அவர் ஜனவரி 24, 2014 அன்று N 5091388 என்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார். நொவம்பர் 5, 2018 அன்று ராஜதந்திர கடவுச்சீட்டையும் பெற்றுள்ளார். ஆயினும் அவர் பிரித்தானிய பிரஜாவுரிமையை கை விட்டுள்ளமையை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்காது விட்டால், புதிய ராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது என்றும் கட்டுப்பாட்டாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்” எனவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

டயானா கமகே அனுப்பிய விசா விண்ணப்பங்களின் ஆவணங்களையும் தனது கடிதத்தில் கட்டுப்பாட்டாளர் இணைத்துள்ளார்.

டயானா கமகேயின் பிரஜாவுரிமை தொடர்பாக நாடாளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் தகவல்களை வெளிப்படுத்தியமையினை அடுத்து, அங்கு பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டயானாவின் கடவுச்சீட்டு விவகாரத்தை நாடகமாக்க வேண்டாம் என கூறியதோடு, “நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு கட்சியை வழங்கியவர் டயானா கமகே. எனவே அவரது கடவுச்சீட்டு விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம்” என்றும் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்