முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

🕔 October 24, 2022

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மூவர் உட்பட 08 தமிழ் கைதிகள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தடவை நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 04 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, இவர்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டியுள்ள தண்டனை காலத்தைக் குறைத்து இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்த மற்றுமிரு தமிழ் கைதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்றும், மேலும் இரு கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் எதிர்வரும் காலங்களில் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் இதில் அடங்குகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்