மாணவர்களின் புத்தகப் பைகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும்: கல்வியமைச்சர்
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தற்போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன. எனவே இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“பாடசாலை மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பில் அடுத்தவாரம் நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.