ஜனாதிபதியின் கட்டிலில் படுத்து ‘போஸ்’ கொடுத்த ஆனந்தராஜா நாட்டிலிருந்து தப்பிச் சென்றார்: பசில் ராஜபக்ஷவின் கூட்டாளி எனக் கூறப்படும் இவர் யார்?
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, ஜனாதிபதியின் கட்டிலில் படுத்து அதனைப் படமெடுத்து வெளியிட்ட மேல்வா குழுவின் தலைவர் ஆனந்தராஜா பிள்ளை கைது செய்யாமை தொடர்பில் பலத்த விவாதங்கள் இடம்பெற்று வருவதாக ‘சிறிலங்கா மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டமான ‘அறகலய’வுக்கு நிதி உதவி வழங்கிய முக்கிய நபர்களில் ஆனந்தராஜாவும் ஒருவர் என ‘ஸ்ரீ லங்கா மிரர்’ தெரிவிக்கிறது.
ஆனந்தராஜா தற்போது இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைத் தப்பிச் செல்ல அனுமதித்ததற்காக பாதுகாப்புப் படையினர் மீது விரல் நீட்டப்படுவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் கட்டிலில் படுத்து ‘போஸ்’ கொடுப்பது போன்ற படங்கள் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனந்தராஜா என்பவர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய கூட்டாளி என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் பசில் நிதியமைச்சராக இருந்த காலத்தில் – ஆனந்தராஜா மற்றும் உருக்கு கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்திருந்த ஜயதேவ நந்தன லொக்குவிதான ஆகியோரின் வியாபாரத்தில் பெருளவு லாபம் பெறும் பொருட்டு, இறக்குமதி செய்யப்பட்ட அதிகளவான இரும்புக்கு உள்நாட்டில் அதிக வரி விதிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
இதன் காரணமாக இரும்ப விலை உயர்ந்ததாகவும், அதனால் கட்டுமானத் தொழில் நலிவடைந்து, இத்துறையைச் சேர்ந்த பலர் வேலையிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடனும் ஆனந்தராஜா மிகவும் நெருக்கமாகப் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.