40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு ஐஎம்எப் கோரிக்கை: லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக 40 அரச நிறுவனங்களை தனியா மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது, எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணைக்கு தமது ஆதரவை வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல கூறியுள்ளார் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு, உறுதியான நிதித் திட்டமொன்று கடைப்பிடிக்கப்பட வேண்டும் என – ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஒருமைப்பாட்டை பாதுகாப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல; இதற்கு அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷக்களின் குப்பைகளைக் கழுவும் ஒரு குப்பை லொறியாகும். எதிர்க்கட்சி அவ்வாறான குழுவுடன் இணைய வேண்டிய அவசியமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.