திறைசேரியில் தங்கியிருக்கும் நிறுவனமாக நாம் இருக்க முடியாது: நகர அபிவிருத்தி சபையின் புதிய தலைவர் கடமையேற்பு நிகழ்வில் தெரிவிப்பு

🕔 August 5, 2022

– முனீரா அபூபக்கர் –

நாடு முகம் கொடுத்துள்ள டொலர் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விசேஷமான பொறுப்பொன்று உள்ளதாக நகர அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நேற்று (04) பொறுப்பேற்ற நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்கள்.

“எக் காரணம்.கொண்டும் நகர அபிவிருத்தி அதிகார சபை  திறைசேரியில் தங்கியிருக்கும் நிறுவனமாக  இருக்க முடியாது”  எனவும் அவர் இதன்போது கூறினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த நியமனத்தை வழங்கினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக நிமேஷ் ஹேரத் நேற்று (04) காலை பத்தரமுல்லை செத்சிறிபாய இரண்டாம் கட்டத்தில் அமைந்துள்ள அதிகார சபையில் சுப நேரத்தில் கடமையேற்றார்.

தகவல் தொழினுட்பத்தில் விஷேட கெளரவப் பட்டம் பெற்ற நிமேஷ் ஹேரத் கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.

இதற்கு முன்னர் சுற்றுலா சபையின் ஆலோசனை சபையின் உறுப்பினராக இருந்த அவர், விருந்தோம்பல் துறையின் ஊடாக அரச நிறுவனங்களில் வேலை திட்ட முகாமைத்துவம், வர்த்தக அபிவிருத்தி விற்பனை முகாமையாளர், மனித வள முகாமை, டிஜிட்டல் விற்பனை உட்பட பல துறைகளில் 15 வருடங்களுக்கு  மேற்பட்ட தொழிலாண்மை அபிவிருத்தியுடைய ஒருவராகத் திகழ்கின்றார்.

தனது கடமையை பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற வைபவத்தில் புதிய தலைவர் நிமேஷ் ஹேரத் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவற்றினை கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“அரச நிறுவனங்கள் – நவீன தொழில்னுட்பத்துடன் செயல்பட வேண்டும். மேலும் அரச ஊழியர்கள் தங்கள் பழைய எண்ணங்களை உதறித் தள்ளிவிட்டு புதிய காலத்துக்கு ஏற்ற வகையில் பணியாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். நவீன உலகத்தைக் கையாளத் தெரியாமல் நாம் பயணிக்க முடியாது.

தற்போதைய எமது நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. டொலர் பற்றாக்குறை அவற்றுள் முக்கியமானதாகும். இந்த டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு தேடுவது எப்படி என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.

எங்களைப் பராமரிக்க வேண்டிய பணத்தை நாங்களே தேடிக் கொள்ள வேண்டும். நகர அபிவிருத்தி.அதிகார சபை திறைசேரியில் தங்கி இருக்க முடியாது. அரசுக்குப் பாரமில்லாமல் வேலை செய்யுமாறு இந்தப் பதவியைப் பெற்றுக் கொள்ளும் போது – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எனக்கு ஆலோசனை கூறினார். அந்த வழிகாட்டுதலுக்கேற்ப நாமும் வேலை செய்வோம். 

படித்த, புத்திசாலியான செல்வந்தர்கள் மட்டுமல்ல – ஏழையான எழுத்தறிவில்லாத கிராமவாசிகளும் இன்நிறுவனத்தில் சேவையைப் பெற்றுக் கொள்ள வருகிறார்கள். எனவே ஊழியர்கள் அனைவரும் பணி புரியும் போது, உங்கள் முன்வரும் அனைவரையும் மனிதாபிமானத்துடன் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர உட்பட அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்