ஜனாதிபதி மாளிகையில் இருந்த ‘பியர் குவளை’யை கொண்டு சென்றவர் கைது

🕔 August 3, 2022

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் ஜுலை 09ஆம் திகதி மக்கள் போராட்டத்தில் கைப்பற்றப்பட்டபோது, அங்கிருந்து பியர் குவளையை (beer mug) திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

ரங்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபர் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவர் குருநாகல் – வெல்லவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலும் இரு நண்பர்களுடன் ஜூலை 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த பியர் போத்தலை கைப்பற்றிய குழுவினர், அந்த வளாகத்தில் இருந்த பியர் குவளைகளை பயன்படுத்தி மது அருந்தியுள்ளனர்.

சந்தேக நபர் பியர் குவளையை நினைவுப் பொருளாக வைத்திருக்கும் வகையில் அதனை தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர் ஜனாதிபதியின் வீட்டில் தனது நண்பர்களுடன் பியர் குவளையுடன் இருந்த புகைப்படத்தை – தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பான பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இல்லத்தினுள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை மற்றும் பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் – குறித்த சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட பிளர் குவளையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்