மாலைதீவு சபாநாயகர் நஷீட்டின் சகோதரர், தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது
மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீட்டின் சகோதரர் அகமது நாஸிம் அப்துல் சத்தார் – தன்பால் சேர்க்கையில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை மாலைதீவு சபாநாயகர் நஷீட் – தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி அவரது சகோதரரைக் கைது செய்துள்ளதாக நஷீத் ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கைது குற்றவியல் நடைமுறைகளுக்கு எதிரானது என்றும், கூட்டணியில் உள்ள கடும்போக்கு தீவிரவாதிகளை திருப்திப்படுத்த அரசியல் உந்துதல் இதுவெனவும்” என்று நஷீட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதி செய்துள்ளதாக, மாலைதீவில் உள்ள சன் – செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மாலைதீவைச் சேர்ந்த ஆண்கள் என்றும், அவர்கள் 45, 35 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் சன் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் நஜீம், நோலிவரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஷீட் (கேர்னல் நஷீட்) மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறையில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் ரஃபீயு ஆகியோராவர்.
மேற்படி மூன்று பேரும் – பங்களாதேஸ் நாட்டவரான எம்.டி. ஆலம்கிரி எனும் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவருடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் உள்ளன.
ஆலம்கிரி ஜூலை 12ஆம் திகதிகைது செய்யப்பட்டார். அவர் வாடிக்கையாளர்களுடன் உடலுறவு கொள்வதை வீடியோவாக பதிவு செய்வதாகவும், பின்னர் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டவர்களை மிரட்டுவதற்கு அந்த வீடியோகளை ஆலம்கிரி பயன்படுத்துகிறார் எனவும் பொலிஸார் நம்புகின்றனர்.