ஒலுவில் மீன்பிடித் துறைமுககத்துக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்; “அண்ணன் அஷ்ரப் பெயரைச் சூட்ட அவா” எனவும் தெரிவிப்பு

🕔 June 23, 2022

பாறுக் ஷிஹான்

“ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடி – முன்னாள் அமைச்சர் அஷ்ரப் ஆவார். அவருடைய பெயரை மீன்பிடித் துறைமுகத்துக்கு சூட்டுவதற்கு பேரவா கொண்டு இருக்கின்றேன்” என, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை பாவனைக்கு உட்படுத்துவதிலுள்ள தடைகளை அகற்றுவது தொடர்பில் நிலைமைகளை அறிந்கொள்வதற்காக நேற்று (22) துறைமுகத்துக்கு நேரடியாக விஜயம் செய்தபோது, அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை கடற்றொழில் வள அமைச்சு பொறுப்பெடுத்து இரு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. ஆனால் இதை மீள இயங்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதில் பாரிய தடைகளை, குறுக்கீடுகளை நான் எதிர்கொள்ள நேர்ந்தது.

இங்கு இயந்திரங்களின் சத்தத்தை இன்று செவிமடுக்க முடிகின்றமை மகிழ்ச்சி தருகின்றது. ஓரிரு மாதங்களில் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் மீண்டும் இயங்கும்.

ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடி – அண்ணன் அஷ்ரப் ஆவார். அவருடைய பெயரை இத்துறைமுகத்துக்கு சூட்டுவதற்கு பேரவா கொண்டு இருக்கின்றேன். ஒலுவில் துறைமுகம் பசுமையாக காணப்பட வேண்டும் என்கிற அவரின் கனவுக்கு உயிர் கொடுக்கின்றேன்.

மரங்களை நாட்டுவதை மாத்திரம் அது குறிக்கவில்லை. பச்சை நிறத்தை தீட்டுவதை அது குறிக்கவில்லை. மக்களின் வாழ்வு பசுமை பெற வேண்டும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒலுவில் துறைமுகத்தை மீள இயங்க வைத்து தருவார்கள் என்று தேர்தல் காலத்தில் இங்கு உள்ள மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கி உள்ளார்கள்.

கடற்றொழில் வள அமைச்சரான நான் அவர்களின் வாக்குறுதிகளையும் கையில் எடுத்திருப்பவனாக உங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றேன். ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் இயங்க செய்வதன் மூலம், நாட்டுக்கு பெருந்தொகையான வருமானம் கிடைக்கும் என்று – துறை சார்ந்த நிபுணர்கள் அறிய தந்து உள்ளார்கள்.

அதே நேரத்தில் இங்கு உள்ள மக்களின் வாழ்க்கையும் பசுமை பெறும். இப்பகுதி மக்களுக்கு கணிசமான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

எரிபொருள் பிரச்சினை நாடளாவிய ரீதியில் உள்ள பொதுவான பிரச்சினை ஆகும். இருந்தாலும் நான் இதை தீர்ப்பதற்கு இரு நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன். இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், டுபாயில் இருந்து கொழும்புக்கும் எரிபொருட்கள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து உள்ளேன்.

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு  உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் மக்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வைக்கோல் பட்டறை நாய் போன்றது. செய்யவும் மாட்டார்கள். செய்ய விடவும் மாட்டார்கள். எனக்கு வடக்கு, கிழக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும் துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் ஒரு வர்த்தக கப்பல்கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இது வரை வரவே இல்லை.

ஏனெனில் மணல் நிரம்புவதால், இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது” என்றார்.

இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை  சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப்பின் பெயரினை  வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் முதல் கட்டமாக மீன் பதனிடும் தனியார் தொழிற்சாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அமைச்சர் பார்வையிட்டார்.

பல கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தை பராமரிப்பதற்கு, மாதாந்தம் துறைமுக அபிவிருத்தி அதிகார சபை 56 லட்சம் ரூபாய் வரை செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்