பிரதமர் மற்றும் சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கு இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் நடந்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 பேர் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ள நிலையில், ஜூன் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தமது பணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், இலங்கை அதிகாரிகளுடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு கலந்துரையாடல்களை தொடரும்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஏற்பாட்டினால் ஆதரிக்கப்படக்கூடிய பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை தொடரும் என்று கூறியுள்ளது.
மே 09 முதல் மே 24 வரையிலான முந்தைய மெய்நிகர் செயற்பாடுகளின் போது ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் கலந்துரையாடல் உருவாக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அந்த நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.