வழமையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கடவுச் சீட்டு 10 நாட்களில் விநியோகம்: குடிவரவு – குடியகர்வு திணைக்களம் தெரிவிப்பு
இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.
வழக்கமாக 10 நாட்களில் வழங்கப்படும் கடவுச் சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 10,000 என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், கடந்த சில நாட்களில் திணைக்களம் ஒரு நாளைக்கு 3,000 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாள் சேவையின் கீழ் திணைக்களம் சராசரியாக தினமும் சுமார் 2,000 கடவுச்சீட்டுகளை வழங்குவதாக அவர் கூறினார்.
“எனினும், அந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் இந்த நாட்களில் கடவுச்சீட்டு பெறுவதற்கு ஏராளமானோர் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திங்கட்கிழமை (13) பொது விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் அன்றைய தினம் வழமை போன்று திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.