தெ.கி.பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

🕔 June 12, 2022

பாறுக் ஷிஹான்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2017/18 ஆம் ஆண்டுக்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் கலாநிதி ஏ. சண்முகதாஸ் Zoom தொழிநுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு பிரதான உரை நிகழ்த்தினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த கற்கை நெறியானது, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில வருடங்கள் காலதாமதமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வருடம் இதற்கான இறுதிப் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இதில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், இரு மாணவர்கள் அதி விஷேட (Distinction) சித்திகளைப் பெற்றிருந்தனர்.

இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவரும், இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் தலைமைப் பேராசிரியரும், வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.எச் தௌபீக், பல்கலைக்கழ பதிவாளர் மற்றும் இப்பயிற்சி நெறியின் அனைத்து வளவாளர்களும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்