மன்னார் காற்றலை மின் திட்டம்; ஜனாதிபதியை கோப் குழுவில் போட்டுக் கொடுத்த CEB தலைவர்: பின்னர் பல்டியடிப்பு

🕔 June 12, 2022
மின்சார சபைத் தலைவர் பெர்டினான்டோ

ன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவுக்குச் சொந்தமான அதானி நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்துக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தார்.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – எவ்வாறு இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என கோப் குழு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ பதிலளித்தார்.

”ஜனாதிபதியினால் இது தொடர்பிலான அறிவிப்பு அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி என்னை அழைத்திருந்தார். கடந்த நெபவம்பர் 24ம் திகதி என நினைக்கின்றேன். இதை அதானி நிறுவனத்துக்கு வழங்குங்கள் என கூறினார். இதை வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி எனக்கு அழுத்தங்களை விடுக்கின்றார் என அவர் என்னிடம் கூறினார். இது எனக்கும், இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உள்ள பிரச்சினை இல்லை. இது முதலீட்டு சபைக்குரிய பிரச்சினை என நான் கூறினேன். ஜனாதிபதி எனக்கு உத்தரவு பிறப்பிக்கின்றார், அதனால், நிதி அமைச்சு இதனை செய்துகொள்ளுமாறு நான் கடிதமொன்றை எழுதினேன்” என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி மறுப்பு

இந்த நிலையில் மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை தான் வழங்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வாபஸ் பெற்ற மின்சார சபைத் தலைவர்

இதனையடுத்து கோப் குழுவின் முன்னிலையில் தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ தெரிவித்துள்ளார்.

மின்சார சபை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக, உணவு உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வெளியிடப்பட்டதாக பெர்டினான்டோ கூறியுள்ளார்.

இந்த கருத்தை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டிற்கு ஜனாதிபதி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இந்திய தூதரகத்தினால் அழுத்தம் விடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன பின்னணி?

1989 மின்சாரச் சட்டத்தில் போட்டி ஏலத்தை நீக்கிய திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை – பொது விசாரணை நடைபெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி; “கோரப்படாத” அதானி ஒப்பந்தத்திற்கு இடமளிப்பதே திருத்தத்தை முன்வைப்பதற்கான முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டியது. 10 மெகாவாட் திறனுக்கு அப்பாற்பட்ட திட்டங்கள் போட்டி ஏலம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்று கோரியது.

நாடாளுமன்றத்தில், இலங்கை மின்சாரச் சட்டத்தில் திருத்தங்கள் மசோதாவுக்கு ஆதரவாக 120 பேரும் எதிராக 36 பேரும் வாக்களித்தனர். 13 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சட்டத் திருத்த நடவடிக்கைக்கு, இலங்கை மின்சார சபையின் மின்சாரத் துறை தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த திருத்தங்கள், சட்டமாக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபையில் உள்ள பொறியாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாகத் தெரிவித்தனர். பின்னர் அதனைக் கைவிட்டனர்.

கோட்டாவை சந்தித்த அதானி

இந்திய பெருநிறுவன தொழிலதிபரான கௌதம் அதானி 2021ஆம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கைக்கு வந்திருந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாவுடன் கௌதம் அதானி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்