பதவி விலகினார் பசில்; ஊடக சந்திப்பில் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்துக்கமைய, கடந்த 2021 ஜூலை 07 ஆம் திகதி – நான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டேன்.
கடந்த ஏப்ரலில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுடன் நானும் பதவி விலகினேன்” என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தகுதிவாய்ந்த ஒருவரை நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாக கூறிய அசவர்; அவசியம் ஏற்படின் தொடர்ந்தும் கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் இதன்போது மேலும் தெரிவித்தார்.