மிருதங்கக் கலைஞர் முதலை தாக்கி மரணம்: நிந்தவூர் பகுதியில் சம்பவம்

🕔 June 1, 2022

பாறுக் ஷிஹான்

புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தர் – முதலை தாக்கி உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30)  காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக, குறித்த நபர் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்  55 வயதுடைய நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீட் ஹூசைன் என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் மறுநாளான செவ்வாய்க்கிழமை (நேற்று)  காலை முதலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது.

07 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் இசைக் கலைஞனாவார். இவர் மிருதங்கம் வாசிப்பதில் சிறந்து விளங்கியதுடன் மக்களினால்  ‘டோல் மாஸ்டர்’ என அழைக்கப்பட்டார்.

கடந்த வருடம் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் இவருக்கு ‘சுவதம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினமன்று  காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்த களியோடை ஆற்றின் வடக்குப் புறத்தில், இவருடைய துவிச்சக்கர வண்டியும்  சேர்ட்டும் பாதணியும் காணப்பட்டன.

மேலும் வெட்டப்பட்ட புற்களும் தலையில் அணிந்திருந்த தொப்பியும்  புல்லை எடுத்துச் செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பையும் அந்த இடத்தில் காணப்பட்டதை அடுத்து, உறவினர்கள் தேடத் தொடங்கினர்.

முதலையின் தாக்குதலில் மரணித்தவர் நாளாந்தம் தமது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். சம்பவ தினம் புல் வெட்டச் செல்பவர் காலை 9.00 மணியளவில் வீடு திரும்புவது வழக்கமாகும்.

ஆனால் சம்பவமன்று புல் வெட்ட சென்றவர் – நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள்  ஆற்றிலும், அதனைச் சூழவுள்ள இடங்களிலும் தேடியுள்ளனர்.

பின்னர்  கடற்படையினரும் குறித்த நபரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட னர். இந்த நிலையில்  தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு அருகிலுள்ள தென்னந் தோட்டத்தில் உள்ள நீரோடையிலுள்ள முதலையின் புதைகுழி ஒன்றுக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புல் வெட்டிய இடத்திலிருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்