வஸீம் தாஜுத்தீன்: காக்கை சிறகு கோட்பாட்டில் காணாமல் போனவர்

🕔 May 18, 2022

வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு, நேற்றுடன் 10 வருடங்கள் பூர்த்தி

– அப்ரா அன்ஸார் –

கசியங்கள் ஒன்றுக்கொன்று இந்த உலகில் பிரிந்து வாழ்கின்றன. நாம் வாழும் இந்த உலகத்தில்தான் மடிந்தும் போகிறோம். அதுவே நியதியாகும்.

இந்த உலகில் ‘காக்கைச் சிறகுக் கோட்பாட்டில்’ காணாமல் போனவர்கள்தான் எத்தனை பேர்? ‘காக்கையை கொன்று மரத்தில் தொங்க விட்டால் – அந்த இடத்துக்கு காகங்கள் வராது’ என்பதுதான் இந்த பூமியின் உண்மையாக உள்ளது. அந்த உண்மை, நீண்ட காலமாக பல காகங்களை கொன்று இறக்கைகளை தொங்க விட்டது. அதன்போது மற்ற காகங்கள் அமைதி காத்தன. அப்படித்தான் சமூகமும் இருந்து வந்தது.

ஆனால் கொலை செய்யப்பட்ட காகங்கள் ஒரு காலத்தில் ‘ஆத்மா’களாக வெளிவர ஆரம்பித்தன. அவை ஒன்று சேர்ந்து ‘கா.. கா’ என்கின்றன. பெரும்பாலான மனிதர்கள் காகத்தின் சிறகுகளாக இவ்வுலகிலிருந்து மறைந்தனர்.

காகம், காலம், வரலாறு போன்ற கறுப்பாகவே உள்ளன. ‘இருக்கின்றவர்களை விட இறந்தவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்’ என்பதை இன்றைய நிலை நிரூபித்துள்ளது.

கொலையின் பின்னணி

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (17) 10 வருடங்கள் பூர்த்தியாகி உள்ளது. கடந்த 2012 மே 17ஆம் திகதி  வஸீம் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் காருக்குள் நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது. எனினும் இன்று வரை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அவருடைய கொலையுடன் தொடர்புடைய வழக்கையும் தொடராது மூடிவிட்டார்கள்.

கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. கொலைகாரனும் மாயமாய் மறைந்து போனான். நல்லாட்சி மலர முக்கிய பங்கு வகித்தவற்றில்; ‘வஸீம் தாஜுதீன் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்போம்’ என வழங்கப்பட்ட வாக்குறுதியும் ஒன்றாக இருந்தது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு கோட்டா அரசாங்கம் ஆட்சியமைத்ததுடன் இந்த விவகாரம் முற்று முழுதாக மூடப்பட்டது .

கடந்த வருடம் இந்த கொலையுடன் தொடர்புடைய, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருடைய இறப்பும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலை தொடர்பான அனைத்து விடயங்களும் புரியாத புதிராகவே உள்ளன. ‘சிசிரிவி காட்சிகள் மற்றும் உறுதி செய்த விடயங்களை வைத்து குற்றவாளிகளை கைது செய்வோம்’ என்று கூறப்பட்டவை வெறும் ஆறுதல் வார்த்தைகளாகி விட்டன.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க

குறித்த கொலைச்சம்பவம் நிகழ்ந்த நாளன்று – அலரி மாளிகையில் இருந்து சென்ற நான்கு வாகனங்கள் மற்றும் அவற்றின் பயணங்கள் சம்பந்தமாக விசாரணை செய்யப்படுவதாகவும் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாவலர்களாக கடமையாற்றிய ராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் சிலரின் பயணங்கள் சம்பந்தமாக விசாரணை செய்யப்படுவதாகவும் அப்போதைய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் கூறியிருந்தார். அதன் பிறகு, அவர்களின் பயணங்கள் சம்பந்தமாக உத்தியோகபூர்வ பதிவறிக்கையை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும், உயிரிழந்த வஸீம் தாஜுதீனின் தொலைபேசி மற்றும் கணினி ஊடாகவும் விசாரிக்கப்பட்டதாகவும், அவற்றின் ஊடாக முக்கியமான தரவுகளை கண்டறிய முடியவில்லை என்றும் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் தெரிவித்து விட்டார்.

கொலை நடந்த தினம், அலரி மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்ற நான்கு வாகனங்கள் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணைகளை மேற்கொண்டது. அப்போது தாஜுதீனின் கொலை நிகழ்ந்த நாளில், குறிப்பிட்ட நேரத்தில் நாசாவின் செயற்கைக் கோளினால் பிடிக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை தமக்குப் பெற்றுத் தருமாறு சிஐடி கோரியது. ஆனாலும் குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடத்தில் எந்தவொரு செய்மதியும் செயற்படவில்லை என்பதால் அவ்வாறான எந்தப் படங்களும் இல்லை என நாசாவினால் தெரிவிக்கப்பட்டது

இதன் பின்னர் இப் படுகொலை குறித்த விசாரணைகளில் நம்பிக்கையூட்டும் வகையில் – சிஐடியுடன் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்னாயக்க சில தகவல்களை நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார். அவ்வேளை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் ‘சிரிலிய சவிய’ எனும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் வண்டியில் தாஜுத்தீன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக சிஐடிக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவலின் பின்னர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

டப்ளியூ.பி.கே.ஏ 0642 எனும் குறித்த டிபெண்டர் வண்டியில் உயிரியல் கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய, அரச ரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது.
அப்போது அதில் இன்றும் பரிசோதனைக்கேற்ற நிலையில் உயிரியல் கூறுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலைமை நம்பிக்கையளிக்கக்கூடியதாக அமைத்தது. அந்த உயிரியல் கூறுகள் வஸீமினுடையதாக இருந்தால் இவ் வழக்கில் மிகப்பெரும் திருப்புமுனை ஏற்படும் என்று இருக்கையிலே, இது பற்றிய உண்மை மர்மமாகியது.

இதேவேளை வஸீம் கொலை செய்யப்பட்ட தினத்தில் ‘ஜனாதிபதி மாளிகையிலிருந்து’ வெளியேறிய நான்கு வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தி உள்ளோம் என்று நீதிமன்றில் கூறப்பட்ட போது, அறிக்கையில் ‘அலரி மாளிகை’ என குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானித்த நீதிவான்; ‘ஜனாதிபதி மாளிகை’யெனக் குறிப்பிட்டது அலரி மாளிகையினையா என கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் “ஆம்” என்று கூறியதுடன், அப்போதைய ஜனாதிபதி அங்குதான் தங்கியிருந்ததாகக் கூறினார்.

நீதிவான் இசுரு நெத்திகுமார, அந்த ராணுவத்தினர் எதற்காக அலரி மாளிகையில் இருந்தனர் என கேட்டார். அதற்கு ‘பிரபு பாதுகாப்பு அதிகாரிகளாக’ அவர்கள் செயற்பட்டார்கள் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பதிலளித்தார். “அந்தப் பிரபு யார்” என மீண்டும் நீதிவான் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்; “அவர் மஹிந்த ராஜபக்”ஷ என பதிலளித்தார்.

இதன் பின்னர் கொலை செய்யப்பட்ட தினத்தில் அதாவது 2012.05.16ஆம் திகதிக்கும் மறுநாள் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட கால நேரத்தில், சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள தொலைபேசி தொடர்பாடல் கோபுரத்திலிருந்து அனைத்து தகவல்களும் பெறப்பட்டு அதிலிருந்து சந்தேக நபரை அடையாளம் காணும் முயற்சியும் எடுக்கப்பட்டு – அதுவும் தோல்வியில் முடிந்தது.

இந் நிலையில் தற்போதுள்ள மூன்று சந்தேக நபர்களுக்கும் எதிராக தண்டனை சட்டக் கோவையின் 198, 215ஆம் சரத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் தெளிவாக இருந்தது. பின்னர் தீவிரமாக சென்ற இந்த வழக்கு 2019 ஜுன் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எதிர்பார்ப்புகளை நசுக்கியதோடு, ‘கதிரையில் கள்வன்’ அமர்ந்ததும் இந்த வழக்கு மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.

இப்போதைய நிலைமை

‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழி இன்று உயிர் பெற்றுள்ளது. தாஜுதீன், லசந்த, தராக்கி, நிமலராஜன், பிரகீத், லலித் குகன் போன்றவர்கள் எத்தனை பேர் இவ்வுலகிலிருந்து மறைந்திருக்கிறார்கள். நான் முதலில் கூறியது போல ‘காக்கைச் சிறகுக் கோட்பாட்டில்’ காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? எத்தனை உடமைக ள்? எவ்வளவு சேதங்கள்? என்று பார்த்தோமானால் அவற்றை இலகுவாக கணக்கிட முடியாது.

இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார பஞ்சத்தின் காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 2019 இல் வாக்களித்த 69 லட்சம் மக்களும், அவருக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் கடந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களை சுருக்கமாக கூறுவது கடி னம். இதற்கெல்லாம் மூல காரணியாக இருந்தவர்கள் ராஜபக்ஷவினர்தான் என்பதில் மறுப்புகளில்லை.

எனினும் அவர்களை ஆதரித்த பெரும்பான்மை மக்களில் அதிகமானோர் அந்த நேரத்தில் மெளனிகளாகவே இருந்தனர். தமிழர் இனப் படுகொலை, அளுத்கம கலவரம், கொரோவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை இங்கு முக்கிய அநீதிகளாகக் கூறலாம். ராஜபக்ஷவினர் கடந்த காலங்களில் பற்ற வைத்த தீ எல்லாம் – இன்று ஒன்று சேர்ந்து தீப் பாறையாக உருவாகியுள்ளது. ‘மொட்டு’ தனக்குத் தானே வைத்த தீ என்று பலர் கூறினாலும், இந்த தீ அவர்கள் அழித்த அனைவரின் சாபத்தினாலும் பரவியது என்று கூறுவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கடந்த எட்டு வருடங்கள் 2019 வரை மௌனமாக இருந்த வஸீமின் குடும்பத்தினர் 2019ஆம் ஆண்டு; “கொலைக்கு நீதி வேண்டும்” என கூறியிருந்தனர்.

காலிமுகத் திடலில் நேற்று வஸீம் தாஜுதீனுக்காக நீதி கோரப்பட்ட போது…

“உம்மா 12 மணிக்கு முன்னர் வந்து விடுவேன் என்று கூறியவாறு இரவு 08 மணிக்கு போன தம்பி திரும்பி வரவே இல்லை. உம்மா இன்னும் அவருக்காக அழுது காத்துக் கொண்டிருக்கிறார்”

“ஹவ்லோக் விளையாட்டுக் கழகத்தினை வாங்கப் போவதாக வஸீம் கூறியிருந்தார். தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் சொல்லவில்லை. நாங்கள் கவலைப் படுவோம் என்பதால் வஸீம் தனது பிரச்சினைகளை எங்களிடம் சொல்வதில்லை”

“வஸீமின் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஹவ்லோக் விளையாட்டுக் கழகம் இருந்துள்ளது. அது அவரின் வீட்டை போலவே இருந்தது. அவர் அதன் மீது அவ்வளவு நேசம் வைத்திருந்தார். அதற்காக எதையும் செய்வதற்கு அவர் ஆயத்தமாக இருந்தார்.”

“இந்த விசாரணைகளை திசை திருப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்டதாகவே வஸீம் – யசாரா உறவுக் கதை இருந்தது”.

“சாதாரனமானவர்கள் செய்கின்ற குற்றங்களை – படித்தவர்கள் மறைக்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட காரணங்களுக்காக உண்மையான காரணத்தை மறைத்தார்கள். எனது தம்பி குறிப்பிட்ட குழுவின் சதித் திட்டத்துக்கு தன்னையறியாமல் இரையாகி விட்டார்”.

“இது ஒரு திட்டமிட்ட கொலை, இதை மன்னிக்க முடியாது. எந்தக் குற்றமும் வெளிவராமல் மறைந்து விடாது. எனது உம்மாவின் பிரார்த்தனைகள் ஒரு போதும் வீண் போகாது” என வஸீம் தாஜுதீனுடை சகோதரி ஆயிஷா கடந்த 2019ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணில் கூறியிருந்தார்.

அவர் அன்று கூறிய வார்த்தைகள் இன்று உயிர்பெற்று அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
‘வஸீம் தாஜுதீனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் நம்பினோம். அதற்காக பிரார்த்தனை செய்யாத நாளே இல்லை’ என தாஜுதீனின் சகோதரர் அஷ்பான் தாஜுதீன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ‘இன்று அந்தப் பிரார்த்தனையை பலர் கேட்பதை காண்கின்றோம், அதற்காக நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்தப் போராட்டம் பாரியது. இது முன்னெடுக்கப்படும், இது வெற்றி பெறும்’ என்றும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

வஸீம் தாஜுதீன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், குற்றவாளிகள் மறைக்கப்பட்டு வழக்கும் முற்றாக மூடப்பட்டு விட்டது. தேர்தல் காலங்களில் மாத்திரம் பேசும் தலைப்பாக இதனை வைத்துக் கொண்டிருந்தனர். இந்த ராஜபக்ஷவினர் நாட்டின் பொருளாதாரத்தை மாத்திரமின்றி, அநியாயமாக பல உயிர்களையும் கொன்றுள்ளனர். இவை அனைத்துக்கும் இப்போது நாட்டு மக்களின் மத்தியில் தலைகுனிய வேண்டிய நிலைமையில் இந்த ராஜபக்ஷர்கள் இருக்கின்றார்கள். ராஜபக்ஷவினரை விரட்டுவதற்கு உருவாகிய போராட்டக் களத்திலும் ‘வஸீம் தாஜூதீனின் கொலைக்கு நீதி வேண்டும்’ என்ற பதாகைகளை காண முடிந்தது.

வஸீம் மாத்திரமின்றி இவ்வாறு பலர் இந்த ராஜபக்ஷவினரால் அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். நாடு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். கள்வர்கள் கூட்டம் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது. இலங்கையில் நீதி புதைகுழியில் புதைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடமைப்பாடு மக்களுக்கு இருக்கின்றது.

Comments