கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெறும் நோக்கத்துடன் தேர்தலை நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன.
இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.
கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது, தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.