அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி

🕔 August 30, 2021

ப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நேற்று (29) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 06 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால், ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ எனப்படும் ‘ஐஎஸ்’ அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தலிபான் அறிவித்துள்ளது.

தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

மிகப்பெரும் தவறு

கொல்லப்பட்டவர்களில் இரண்டு வயதுடைய சுமையா எனும் குழுந்தையும் அடங்குகின்றது.

“இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது” என்று உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி கூறுகின்றார்.

கொல்லப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை சுமையா, தனது மகள் என்று இமால் அகமதி பிபிசியிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும், விமான நிலையத்துக்குச் செல்வதற்கான தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கப் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய நாசர் என்ற மற்றொரு உறவினரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அகமதி கூறினார்.

மேலும் “அமெரிக்கா மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. எனினும் 10 பேர் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்த சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு அளித்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட வாகனத்தில் அதிக அளவில் வெடிபொருள்கள் இருந்திருக்கலாம், அது அடுத்தடுத்த வெடிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்துக்கு ஐஎஸ்-கே பயங்கரவாத இயக்கத்தால் ஏற்பட்டிருந்த ஆபத்தை ஒழிப்பதில் தங்களது ஆளில்லா விமானத் தாக்குதல் வெற்றிகரமாக இருந்ததாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு முன்னர் கூறியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்