ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்

🕔 August 14, 2021

மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியதால் தலிபான்கள் அதிவேகமாக ஆப்கான் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.

2021 செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கானில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார்.

ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, ஒக்டோபர் 2001ல் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் புகுந்தன.

தலிபான்களை எதிர்கொள்ள பில்லியன் டொலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இறைத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையும் 2011ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,10,000 பேரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த ஆண்டு இது 4,000 துருப்புகளாகவும், தற்போது 650 துருப்புகளாகவும் சுருங்கி இருக்கிறது. அவர்களும் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க அங்கு இருக்கிறார்கள்.

நேட்டோ படைகள் இருந்தாலும், அமெரிக்காதான் ஆப்கானில் அதிக அளவில் ஆட்களை களமிறக்கி இருந்தது.

அமெரிக்காவின் செலவு

2010 தொடக்கம் 2012 வரையான காலத்தில், ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளைக் கொண்டிருந்த காலத்தில், ஆண்டுக்கு 100 பில்லியன் டொலர் வரை அமெரிக்கா செலவழித்தது.

அதிரடி தாக்குதல் திட்டங்களிலிருந்து ராணுவம் தன் கவனத்தை திசை திருப்பி, ஆப்கான் படைகளுக்கு பயிற்சி வழங்கத் தொடங்கிய பின்னர் செலவுகள் கணிசமாக குறைந்தன.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சுமார் 45 பில்லியன் டொலர் செலவழித்ததாக பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க காங்கிரசிடம் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்குப் படி, 2001 – 2019 வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவத்துக்காக 778 பில்லியன் டொலரைச் செலவழித்திருக்கிறது.

அது போக அமெரிக்காவின் உள் துறை அமைச்சு போன்ற மற்ற சில அமெரிக்கத்துறைகள் அனைத்தும் சேர்த்து சுமார் 44 பில்லியன் டொலர ஆப்கானிஸ்தான் போருக்கு செலவழித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் 822 பில்லியன் டொலர்.

இதை இலங்கை ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 165 லட்சம் கோடி ரூபாய் வருகிறது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்கினாலும் அரசுப் படைகளுக்கு ஆண்டுக்கு 04 பில்லியன் டொலர் வீதம், 2024ஆம் ஆண்டு வரை உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.

ஏற்கனவே இந்த ஆண்டில் நேட்டோ 72 மில்லியன் டொலர் அளவிலான சாதனங்கள் உள்ளிட்டவற்றை தந்திருக்கிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், ராணுவ வீரர்களின் உணவு, உடை, மருத்துவ வசதிகள், அவர்களுக்கான சிறப்பு ஊதியம், சலுகைகளுக்கே அதிகம் செலவானது.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இதுவரை சுமார் 143.27 பில்லியன் டொலரை ஆப்கானிஸ்தான் மறுகட்டுமானத்துக்காக செலவழித்துள்ளது.

அதில் 88.32 பில்லியன் டொலர் வரை ஆப்கானிஸ்தானின் ராணுவத்தைக் கட்டமைக்க செலவழிக்கப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவம் மற்றும் காவலர்கள் படை இரண்டுமே அடக்கம்.

கிட்டத்தட்ட 36 பில்லியன் டொலர் – அரசு நிர்வாகத்துக்கும், வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் சிறு சிறு பகுதிகள் போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கைக்கும், சில மனிதாபிமான உதவிகளுக்கும் செலவழிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியது, வீணடித்தது, மோசடி செய்தது என, மே 2009 முதல் டிசம்பர் 2019 வரை கிட்டத்தட்ட 19 பில்லியன் டொலர் வீணடிக்கப்பட்டிருப்பதாக ஒக்டோபர் 2020-ல் அமெரிக்க காங்கிரஸில் தாக்கல் செயப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்