கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் 181 ஜனாஸா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டனவாம்; அதற்குள் மறைமுக விடயங்கள் உள்ளனவாம்: ஹாபிஸ் நசீர் கூறுகிறார்

🕔 March 17, 2021

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் எத்தனை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது என்று தங்களுக்குத்தான் தெரியும் என்றும், 181 ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை எனவும், அச் சம்பவத்திற்குள் அதிகமான மறைமுக விடயங்கள் இருக்கின்றன என்றும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

“பெரும்பான்மை சமூகத்தினருடன் சிறுபான்மை சமூகத்தினர் ஒரு இணக்கப்பாடு அரசியலை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தெளிவு இருக்க வேண்டும்.

முரண்பாட்டு அரசியலை யாரும் செய்ய முடியும். இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதும் அதன்பிற்பாடு கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்குவதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் நாங்கள் அதனை ஊதாசீனம் செய்தோம். நாங்கள் அடக்கம் செய்வதற்கு ஆறு இடங்களை சமர்ப்பித்தோம் அதன்பிற்பாடு உயர் அதிகாரிகள் வருகை தந்து ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சூடுபத்தினசேனையை சிபார்சு செய்தனர்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்யமால் எந்தவிதமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தேன். அதற்கமைய அடக்கம் செய்து விட்டே நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். பேஸ்புக் இல் எழுதுபர்கள் எதையும் எழுதலாம். நாங்கள் ஆதரவு வழங்கியது இதற்காகத்தான். ஆனால் உடல்களை அடக்கம் செய்யும் செயற்பாடு ஏன் பிற்போடப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி ஒரு வாரத்தில் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தீர்வு எட்டப்பட்டது என்பதுதான் உண்மை.

நாங்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்பத்திரெண்டு திணைக்களங்களுக்கு சென்று இதற்கான தீர்வினை பெற்றோம். அதனை நாங்கள் ஊடகத்திற்கு தெரிவிக்கவில்லை. ஞானசார தேரரரையும் எங்களது குழு சந்தித்தது. நான் அதற்கு செல்லவில்லை. வெளியில் இருந்து கூச்சலிடுவதால் எதுவும் நடைபெறாது. தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

இரணைத்தீவில் அடக்கம் செய்யலாம் என்ற முடிவு வந்ததும் ஏறாவூரை சேர்ந்த பெண்ணின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு தயரான போது, அங்கு எதிர்ப்பு அதிகமாக வெளியிடப்பட்டதால் உடனடியாக ஓட்டமாவடியை தீர்மானித்து ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியை தெரிவு செய்தோம்.

ஓட்டமாவடி கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் மையவாடியில் கிறிஸ்தவ பெண் ஒருவரது சடலமும் அடக்கம் செய்யப்பட்டது. அதற்காக இந்த பிரதேச மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னிடம் பிரதமர் கேட்டார் ஓட்டமாவடியில் வேறு மதத்தவர்களின் சடலங்களை அடக்குவதற்கு ஏதும் பிரச்சினை வருமா என்று. அப்படி எதுவும் நடக்காது என்று உங்களை நம்பி நான் தெரிவித்தேன்.

எத்தனை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது என்று எங்களுக்குத்தான் தெரியும். 181 ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அச் சம்பவத்திற்குள் அதிகமான மறைமுக விடயங்கள் இருக்கின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்