காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

🕔 January 17, 2021

நாட்டிலுள்ள 25 பிரதேசங்களுக்கு காதி நீதிபதி பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) படி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை, அனுராதபுரம், பேருவளை, ஹம்பாந்தோட்ட, ஏறாவூர், ஹற்றன், கேகாலை, கிண்ணியா, மாத்தறை, மூதூர் (கொட்டியாரபற்று), நாவலப்பிட்டிய, நிந்தவூர், நீர்கொழும்பு, ஓட்டமாவடி, பொலநறுவை, புட்மோட்டை, புத்தளம் மற்றும் சிலாபம், ரத்தினபுரி, தங்கல்லே, தும்பனை, அவிஸ்ஸாவளை, புத்தளம் (இடம்பெயர்ந்தோர்), பொத்துவில், திருகோணமலை மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களிலுள்ள வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு, மேற்படி பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகளுக்கான அடிப்படைத் தகைமைகள்

மேற்படி காதி நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி ஒருவராக இருத்தல் வேண்டும்.

அல்லது முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படும் சான்றிதழ் பெற்றுள்ள மௌலவி ஒருவராக இருத்தல் வேண்டும்.

அல்லது கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அல் – ஆலிம் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவராக இருத்தல் வேண்டும்.

அல்லது சட்டத்தரணி ஒருவராக அல்லது அதற்கு சமமான தொழில்சார் தகைமையுடைய ஒருவராக இருத்தல் வேண்டும்.

அல்லது ஓய்வுபெற்ற பதவி நிலை தரத்திலான அரச உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல் வேண்டும்.

தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கத் தகைமையற்றவர்களாவர்.

விண்ணப்ப முடிவுத் திகதி – இவ்வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதியாகும்.

சிரேஷ்ட உதவிச் செயலாளர், காதிப் பிரிவு, நீதிச்சேவை ஆணைக்குழு செயலகம், த.பெ. இலக்கம் 573, கொழும்பு – 12 எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்