குரேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; 07 பேர் பலி: பாதி நகரம் அழிந்து விட்டதாக பெட்ரீனியா மேயர் தெரிவிப்பு
🕔 December 30, 2020
ஐரோப்பிய நாடான குரேஷியாவில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
6.4 என்ற அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல் அமைப்பான யுஎஸ் ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.
இதே அளவிலான நிலநடுக்கம் ஒன்று குரேஷிய தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880ல் நிகழ்ந்துள்ளது.
பெட்ரீனியா எனுமிடத்தில் ஒரு 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என்று, செவ்வாய்க்கிழமை, அங்கு அந்த நகரத்திற்கு சென்ற அந்நாட்டின் பிரதமர் ஆண்ட்ரே ப்லென்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.
அதன் அருகே உள்ள க்ளினா எனும் நகரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜாஜினா எனுமிடத்தில் தேவாலயத்தின் கட்டட இடிபாடுகளுக்கு இடையே இன்னொருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
பாதி நகரம் அழிந்துவிட்டதாகவும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் பெட்ரீனியா நகரின் மேயர் தெரிவித்துள்ளார். இந்த நகரத்தில் சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர்.
குரேஷியாவின் தலைநகர் ஜார்ஜெப்பிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
அண்டை நாடுகளான பொஸ்னியா மற்றும் செர்பியாவில் மட்டுமல்லாது இத்தாலி வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கு சொந்தமான கர்ஷ்கோ அணுமின் நிலையமும் ஸ்லோவேனியாவால் மூடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் குரேஷியாவின் பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் பெட்ரீனியா நகரில் ஏற்பட்ட சேதங்களைச் சென்று பார்வையிட்டனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சண்டையில் பெரிதும் அழிந்த ரஷ்ய பிரதேசமான செசன்யாவின் தலைநகர் க்ரோஸ்னி உடன் பெட்ரீனியா நகரின் சேதத்தை ஒப்பிட்டார் அதிபர் ஜோரான் மிலன்கோவிட்ச்.
பெட்ரீனியா நகரம் மனிதர்கள் வாழ இனிமேலும் பாதுகாப்பானது அல்ல என்றும் பிரதமர் ஆண்ட்ரே ப்லென்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.
“ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இங்கு இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதால் மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.