கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை

🕔 December 10, 2020

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஆளும் மற்றும் எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு இதன்போது பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் அறிவித்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகை தந்திருந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும், ராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம். முஷாரப், ஹாபிஸ் நசீர், இஷாக் ரஹ்மான் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம். முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்