வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்

🕔 November 20, 2020

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள காட்டுப் பகுதியில், மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து பகுதியில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டார் என, அண்மையில் மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மேலும் றிசாட் பதியுதீன் தனது சொந்த நிதியில் குறித்த பிரதேசத்தில் மரங்களை நட வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையிலேயே ஒரு ஏக்கரில் மரங்களை நடுவதற்கு 02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதியில் சுமார் 02 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் மரங்களை மீள நடுவதற்காக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், இரண்டு மாதங்களுக்குள் செலவிடப்படும் தொகையை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிதித் தொகை றிசாட் பதியுதீனின் தனிப்பட்ட நிதியிலிருந்து செலவிட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தில் மரங்களை மீள நடுவதற்காக கணிப்பிடப்பட்ட அறிக்கையை, றிசாட் பதியுதீனுக்கும், நீதிமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

நிலத்தைப் பதப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு, குறைந்தது ஐந்து வருடங்களாவது அந்த வனப் பகுதியைப் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிப்பதற்காகச் சுமார் 50 கோடி ரூபா நிதியை, றிசாட் பதியுதீன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்புக்கு நடுவதற்கான மரக்கன்றுகள் தம்மிடம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிதாக மரக்கன்றுகளை வளர்ப்பதற்காகத் தவரணை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: சட்ட விரோத காடழிப்பில் றிசாட் ஈடுபட்தாக நீதிமன்றம் அறிவிப்பு; அவரின் செலவில் மரங்களை நடுமாறும் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்