தேங்காயை அளந்து பார்க்கும் கருவி; சந்தைக்கு வந்தது
தேங்காயின் சுற்றளவை அளப்பதற்கான கருவிகள் தற்போது சந்தைக்கு வந்துள்ளதோடு, அவற்றுக்கான விளம்பரங்களும் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்தக் கருவிக்கான விற்பனை விலை 280 ரூபாய் என, குறிப்பிட்டு, நிறுவனமொன்று விளம்பரப்படுத்தியுள்ளது.
தேங்காயின் சுற்றளவுக்கு ஏற்ப விலையினை அரசு நிர்ணயித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டது.
அதற்கமைய 13 அங்குலத்தை விடவும் கூடிய சுற்றளவுள்ள தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாய் எனவும், 12 – 13 அங்குலம் அளவான தேங்காயின் விலை 65 ரூபாய் எனவும், 12 அங்குலத்தை விடவும் குறைவான சுற்றளவுள்ள தேங்காயின் விலை 60 ரூபாய் எனவும் நிர்ணயித்து, வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட்டது.
எவ்வாறாயினும் நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு சந்தையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதேவேளை, சுற்றளவுக்கேற்ப தேங்காயின் விலை நிர்ணயிக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி, அமைச்சர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.