கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு

🕔 July 17, 2020

மிழகக் கவிஞர், உயிர்மை சஞ்சிகையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் – கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே உறுதி செய்து, பதிவொன்றினை எழுதியுள்ளார்.

குறித்த பதிவில்;

‘ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று (நேற்று வியாழக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றுதான் விரும்பினேன். அதற்குள் எப்படியோ வாட்ஸப் க்ரூப்களில் செய்தி பரவ ஆரம்பித்து நண்பர்கள் பலரும் கவலையுடன் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அதற்காகவே இதை பொதுவில் பகிர்கிறேன்.

எவ்வளவோ கவனமாக இருந்தும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல். சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொண்டதில் ‘பொசிட்டிவ்’ என்று வந்துவிட்டது. சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிட்சை செய்திருப்பதால் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என என் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அட்மிட் ஆகியிருக்கிறேன்.

இந்த நான்கு மாதத்தில் கொரோனா பற்றி எவ்வளவோ எழுதிவிட்டேன். ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.

கொரோனா வார்டின் முதல் நாள் அனுபவமே வெகுசிறப்பாக உள்ளது. பாத்ரூமில் வீல்சேர் நுழையவில்லை. ‘ இப்படி ஒரு பிரச்சினையை இப்போதுதான் எதிர்கொள்கிறோம்’ என்கிறார்கள். ஒரு தலையணை கேட்டு ஐந்து மணி நேரத்திற்குப்பிறகு இப்போதுதான் கிடைத்தது. ஒரு பேய் பங்களாவின் பேரமைதி. இவ்வளவு வசதியின்மைக்கு நடுவே என்னை நானே கவனித்துக்கொள்ளவேண்டும். கொரோனாவைவிட அதுதான் கொடுமையாக இருக்கிறது.

பத்திரமாக இருங்கள். இந்த முறையும் மீண்டு வந்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன்’ என, கவிஞர் மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்